கேரளா: பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த 5 பாதிரியார்கள்!
Recommended Video
திருவனந்தபுரம்: கேரள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி சுமார் 5 பாதிரியார்கள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் மல்லப்பள்ளி அருகே உள்ள ஆனிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், இவரது மனைவி எலிசபெத் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).
இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜான்சன், துபாயில் பணிபுரிந்து வருகிறார். எலிசபெத் மட்டும் குழந்தைகளோடு கேரளாவில் இருக்கிறார்.
இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன் எலிசபெத்தின், கிரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செலவழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான எஸ்எம்எஸ் ஜான்சன் செல்போனுக்கு சென்றது.
நிலைகுலைந்த கணவர்
குழப்பமடைந்த ஜான்சன், மனைவிக்கு போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், எலிசபெத் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. எதையோ கூறி சமாளிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இறுதியில் உண்மையை சொல்லிவிட்டார். அந்த தகவல்கள் ஜான்சனை நிலைகுலையச் செய்தது. உடனடியாக துபாயில் இருந்து சொந்த ஊருக்கு ஓடி வந்தார்.
முதல் பலாத்காரம்
திருமணத்திற்கு முன்பாக எலிசபெத் தனது வீட்டுக்கு அருகே வசித்த உறவுக்காரரும், பாதிரியாருமான ஒருவரால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டாராம். திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு, எலிசபெத்திற்கு அந்த சம்பவம் உறுத்தலாக இருந்ததாம். எனவே, மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை கட்டுப்பாட்டில் உள்ள மல்லப்பள்ளி சர்ச்சுக்கு சென்று அங்கிருந்த பாதிரியாரிடம், முன்பு நடந்த சம்பவத்தை கூறி பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்.
பாவ மன்னிப்பு
இதை கேட்டுக்கொண்ட அந்த பாதிரியார், நடந்த சம்பவத்தை உனது கணவரிடம் கூறிவிடுவேன், கூறாமல் இருக்க வேண்டுமானால், என்னிடம் உறவு வைத்துக்கொள் என அழைத்தாராம். இதனால் அச்சமடைந்த எலிசபெத், பாதிரியாரின் ஆசைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்டார் ஹோட்டலுக்கு எலிசபெத்தை கூட்டிச் சென்ற பாதிரியார் அங்கு வைத்து உறவு கொண்டுள்ளார். மேலும், இந்த உடலுறவு காட்சிகளை, செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டார்.
செல்போன் வீடியோ
இதன்பிறகு, அந்த வீடியோ காட்சிகளை காண்பித்து மிரட்டி, எலிசபெத்துடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். இதன்பிறகு, தனது 'சாதனையை' தம்பட்டம் அடித்து சந்தோஷப்படும் நோக்கத்தில், அதே சபையை சேர்ந்த மேலும் 4 பாதிரியார்களுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதை பார்த்த அந்த பாதிரியார்களுக்கும், எலிசபெத் மீது ஆசை வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்களும், எலிசபெத்தை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிரியார்கள் சஸ்பெண்ட்
இந்த சம்பவங்களை மனைவி கூற கேள்விப்பட்ட ஜான்சன், இதுகுறித்து கத்தோலிக்க சபை பிஷப்புக்கு தெரிவித்தார். இதையடுத்து அந்த 5 பாதிரியாரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுவரை அந்த பெண் தரப்பில் போலீசில் புகார் அளிக்கவில்லை. தேவாலய நிர்வாகே விசாரணை நடத்திக்கொண்டுள்ளது. இருப்பினும், ஜான்சன், தேவாலய நிர்வாகிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது.
தொடரும் பாலியல் அத்துமீறல்
கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் மாவட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார்.
நடவடிக்கை தேவை
"கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது" என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.