நிலநடுக்க அபாயத்தில் டெல்லி, மும்பை, ஸ்ரீநகர், குவஹாத்தி.. லேட்டஸ்டாக இணைந்த சென்னை!
டெல்லி: டெல்லி, மும்பை, சென்னை, ஸ்ரீநகர் மற்றும் கவுஹாத்தி ஆகிய 5 நகரங்கள் நிலநடுக்கம் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.
கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.நா. மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் அறிக்கையை நம்பினால் அதன்படி 2050ம் ஆண்டுக்குள் நகர்ப்புற இந்தியாவில் வசிக்கும் மக்களில் 200 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை சந்திக்க நேரிடுமாம்.
இந்தியாவில் உள்ள 54 சதவீத நிலம் நிலநடுக்க அபாயத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவில் நில நடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதிகள் ஜோன் 2, ஜோன் 3, ஜோன் 4 மற்றும் ஜோன் 5 என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஜோன் 5 பகுதியில் உள்ள இடங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது.
கவுஹாத்தி
அஸ்ஸாமில் உள்ள கவுஹாத்தி நகர் ஜோன் 5 பகுதியில் உள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் ஆகும். கவுஹாத்தியில் ஏற்கனவே பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு நிலநடுக்கம் என்பது சாதாரண விஷயம் ஆகும்.
ஸ்ரீநகர்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ஜோன் 5ல் உள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகள் ஜோன் 5ல் உள்ளன. மாநிலத்தின் 90 சதவீத பகுதிகள் ஜோன் 4ல் உள்ளன.
|
டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளது. கடந்த 1720ம் ஆண்டில் இருந்து இதுவரை டெல்லியில் பலமுறை ரிக்டர் அளவுகோலில் 5க்கும் அதிகமான அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மும்பை
மும்பை ஜோன் 3ல் அமைந்துள்ளது. கடலோரம் அமைந்துள்ள மும்பைக்கு சுனாமி அச்சுறுத்தல் அதிகம். நிலநடுக்க அபாயத்தை மனதில் வைத்து தான் மும்பையில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
சென்னை
முன்பு ஜோன் 2ல் இருந்த சென்னை தற்போது ஜோன் 3ல் உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியிருந்தது.