பான் கார்டு இல்லாமல் ரூ. 348 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை..'ஷாக்' ரிப்போர்ட்!
பான் கார்டு இல்லாமல் அரசியல் கட்சிகள் ரூ.348 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பது ஏடிஆர் அமைப்பின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
டெல்லி : நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணான பான் அட்டை இல்லாமல் தேசிய கட்சிகள் ரூ.348 கோடி வரை நன்கொடை பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை நன்கொடையாக பெறும் அரசியல் கட்சிகள் அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். இதன்படி கடந்த 4 ஆண்டுகள் மிகப்பெரிய அளவிலான தொகை தெரியாத நபர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த கால கட்டத்தில் சுமார் 3 ஆயிரம் நன்கொடைகள் நன்கொடையாளர்கள் விவரம் இல்லாமல் அதாவது பான் கார்டு விவரங்கள் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ளது ஏடிஆர் என்று சொல்லப்படும் ஜனநாயக உரிமைகள் சங்க அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில், கடந்த 2012-13ம் நிதியாண்டில் இருந்து 2015-16-ம் நிதியாண்டு வரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை டெல்லியை சேர்ந்த அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் 2012 - 16 கால கட்டத்தில் ரூ.384 கோடி அளவிற்கு நன்கொடை பான் அட்டை விவரங்கள் இல்லாமல் பெறப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஷாக் ரிப்போர்ட்
ஆனால் அதே சமயம் ரூ. 355 கோடிக்கான ஆயிரத்து 546 நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களுடன் பணத்தை நன்கொடையாக கட்சிகளுக்கு அளித்துள்ளனர். இதே போன்று விவரங்களை வெளியிடாமல் தரப்பட்ட நன்கொடையில் ரூ.159 கோடி பாஜகவிற்கு சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கணக்கில் காட்டப்படாத நபர்களிடம் இருந்தே நன்கொடை பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை
2014 - 15 காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து 60 சதவிகித நன்கொடைய பெற்றுள்ளன. 4 ஆண்டுகளில் ரூ. 956.77 கோடி அளவிற்கான தொகையை 5 தேசிய கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளன.
எந்ததெந்த கட்சிகள்
இந்த 5 தேசிய கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடக்கம். அதிக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடையில் பாஜக ரூ.705.81 கோடி பெற்று முதலிடம் வகிக்கிறது, இதே போன்று காங்கிரஸ் கட்சி ரூ.198 கோடி பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது.
நன்கொடையாளர்கள் யார்?
தேசியவாத காங்கிரஸ் ரூ.50.73 கோடி நன்கொடை வாங்கி மூன்றாம் இடத்திலும் 4 மற்றும் 5ம் இடங்கள் முறையே சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளும் பிடித்துள்ளன. 2012 -13 காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு பணம் அளிக்கும் வங்கியாக ரியல் எஸ்டேட் துறை இருந்தள்ளது. அடுத்த 3 நிதியாண்டுகளில் உற்பத்தித்துறையே இரண்டாவது மிகப்பெரிய நன்கொடை அளிக்கும் துறையாக விளங்கியுள்ளது.