பாபநாசம் பட பாணியில் இளம்பெண் கொலை.. மகன்களுடன் 2 ஆண்டுகள் கழித்து சிக்கிய பாஜக பிரமுகர்
இந்தூர்: பாபநாசம் பட பாணியில் இளம்பெண்ணைகொலை செய்து, 2 ஆண்டுகளாக விசாரணையை குழப்பிவிட்ட பாஜக பிரமுகர், அவரின் மகன்கள் 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மலையாள மொழியில் எடுக்கப்பட்ட த்ரிஷியம் என்ற திரைப்படம் பெரும் வசூலை அள்ளிக்குவித்ததோடு.. அதன் திரைக்கதையும் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களை பெற்றது. இதையடுத்து, இதே படம் இந்தியில் திரிஷியம் என்றும், தமிழலில் பாபநாசம் என்றும் எடுக்கப்பட்டது.
அதில் இந்தியில் திரிஷியம் படத்தில் அஜய்தேவ்கான் நடித்துள்ளார். அந்த படத்தை பார்த்துவிட்டு, திரைப்படத்தில் வருவதுபோல் கொலை செய்து போலீஸாரை குழப்பிய சம்பவம் தான் தற்போது வடமாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் இந்த கொலைச் சம்பவம் 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது.
2 ஆண்டுளாக திணறல்
2 ஆண்டுகளாக போலீஸாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்காமல் விசாரணை குழப்பத்துடன் சென்ற நிலையில், இப்போது குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.அதன் முழு விவரம் வருமாறு:இந்தூரைச் சேர்ந்தவர் ஜக்தீஸ் கரோடியா என்கிற கல்லு பல்வான். பாஜகவின் முக்கிய பிரமுகர். அவருக்கு அஜய், விஜய், வினய் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். பாஜக பிரமுகர் ஜக்தீஸ் கரோடியாவுக்கும், பங்கானா பகுதியைச் சேர்ந்த டிவிங்கில் டாக்ரே என்ற 22வயது இளம் பெண்ணுக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில்... இந்த விவகாரம் கரோடியா குடும்பத்தின் அமைதியை கெடுக்க தொடங்கியது.
கொலை செய்துவிடலாம்
குடும்பத்துக்குள் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையிலும், டிவிங்கில் கரோடியா வீட்டிலேயே தங்க ஆரம்பித்தார். அதனால், ஆத்திரமடைந்த கரோடியாவின் மகன்கள் 3 பேரும், அவர்களின் நண்பர்கள் நீலிஷ் காஷ்யப் ஆகியோரும் டிவிங்கில்லை கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.
சினிமா பார்த்தனர்
அதற்காக என்ன மாதிரியான திட்டம் போடலாம் என்று அவர்கள் மண்டையை குழப்பிக் கொண்டிருந்தனர். எந்த யோசனையும் வராமல் போகவே.. 2016-ம் ஆண்டு, அக்டோபர் 16-ம் தேதி ஒரு திரையரங்கில் இந்தியில் வெளியான த்ரிஷியம் படத்தைப் பார்த்துள்ளனர். அவர்கள் 4 பேரின் மனதுக்குள் பொறி ஒன்று தட்ட... படம் பார்த்த கையோடு நேராக டிவிங்கில் வீட்டுக்குச் சென்றனர். முன்பே பேசி வைத்திருந்தபடி... அவரைக் கழுத்தை நெறித்து 4 பேரும் கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் கொண்டு சென்று எரித்துள்ளனர்.
பெண்ணின் உடல்
டுவிங்கில் என்று யாரேனும் கேட்டால் என்ன பதில் சொல்வது என்று நினைத்து அதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தனர். வேறுஒரு இடத்தில் நாயின் உடலை புதைத்துவைத்து, இங்கு ஏதோ பெண்ணின் உடல் இருப்பது போன்று தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் அப்பகுதி மக்களிடமும் மனித உடலை புதைத்துவிட்டதாகவும் சரமாரியாக வதந்திகளையும் கிளப்பிவிட்டுள்ளனர்.
வதந்திகளால் விசாரணை
இளம்பெண் ட்விங்கில் காணாமல் போனது குறித்து போலீசாரும் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வந்தனர். பொதுமக்களிடம் கிடைக்க பெற்ற தொடர் தகவல்களை தொடர்ந்து... குழிக்குள் இருக்கும் உடல் ட்விங்கில்லாக இருக்கும் என்று சந்தேகித்து தோண்டியுள்ளனர். ஆனால் அதை ஆய்வு செய்தபோது அது நாயின் உடல் என தெரியவந்ததால், மண்டை காய்ந்த போலீசார் கொஞ்சம் குழம்பினர்.
மறுபடியும் விசாரணை
பின்னர்.. தொடக்கம் முதல் விசாரணையை தீவிரப்படுத்த.. நூல் பிடித்த மாதிரியே.. கடைசியாக அந்த விசாரணையானது ட்விங்கில் தொடர்பு வைத்திருந்த பாஜக பிரமுகர் கரோடியா, அவரின் மகன்கள் ஆகியோரிடம் வந்து நின்றது. ஒரு முடிவாக களமிறங்கிய போலீசார், முதன்முதன்முறையாக, மூளைக்கு மின் அலைகளைச் செலுத்தி உண்மை கண்டறியும் சோதனைக்கு அறிவியல் ரீதியாக உட்படுத்தினர்.
பலன் கிடைத்தது
இந்தூர் போலீஸார் முதன்முறையாக இந்த முறையை இந்தவழக்கில் இதைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் குற்றவாளிகள் அளிக்கும் பதில்களுக்கு ஏற்றார்போல், அவர்கள் யோதித்து பதில் அளிக்கிறார்களா? அல்லது உடனுக்குடன் பதில் அளிக்கிறார்களா என்பதை மூளையின் நரம்பு உணர்வுகளை வைத்துக் கண்டுபிடிக்க முடியும். போலீசாரின் இந்த புதிய விசாரணை முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. கரோடியா மற்றும் அவரின் மகன்கள் அனைவரும் முரணான தகவல்களை தெரிவித்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ட்விங்கிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
சினிமா பாணியில் கொலை
கொலை செய்வதற்கு முன் த்ரிஷியம் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அது போல் மனித உடலுக்குப் பதிலாக நாயைப் புதைத்துவைத்து போலீஸார் விசாரணையைக் குழப்ப முயன்றுள்ளதை தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் உள்பட 5 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.