நாக்பூரில் சிறைக் கதவுகளை ரம்பத்தால் அறுத்து 5 பயங்கர குற்றவாளிகள் ஓட்டம்: ஜெயிலர் சஸ்பெண்ட்
நாக்பூர்: சிறைக்கம்பிகளை ரம்பம் வைத்து அறுத்து நாக்பூர் மத்திய சிறையிலிருந்து ஐந்து பயங்கரக் குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக அச்சிறையின் சிறைக் கண்காளிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு ஜெர்மன் பேக்கரி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஹிமாயத் பேக், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேனன் உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகள் பலர் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கைதிகள் இன்று அதிகாலை சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் முகமது சோயப் சலீம் காம், பிஷன் சிங் புகே, சதேந்திர குப்தா இவர்கள் மூவர் மீதும் கொலை குற்றச்சாட்டும், ஆகாஷ் தாகூர், பிரேம் நேபாளி இவர்கள் இருவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
கைதிகள் தப்பியது குறித்து சிறை நிர்வாகம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் போலீஸ் தரப்பில், "இரும்புக் கம்பிகளை ரம்பம் வைத்து அறுத்து கைதிகள் தப்பியுள்ளனர். கம்பளிகளை பயன்படுத்தி தங்களை மறைத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அச்சிறையின் கண்காணிப்பாளர் வைபவ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய கைதிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஐந்து கைதிகள் தப்பிச் சென்றதால், அச்சிறையின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.