ம.பி.யில் கம்ப்யூட்டர் பாபா உட்பட 5 சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து... பாஜக அரசு 'வேற லெவல்'
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்து கொடுத்துள்ளார்.
போபால் : இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்து கொடுத்துள்ளார். முதல்வரின் இந்த விநோத நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தேர்தல் நடவடிக்கைகளை இப்போதே தொடங்கிவிட்டது.
மத்திய பிரதேசத்தில் ஓடும் நர்மதா நதியை பாதுகாக்கும் நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஜீவநாடியாக நர்மதா நதி கருதப்படுகிறது. எனவே நர்மதா நதியின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தனித்தனி குழுக்களை சிவராஜ்சிங் சவுகான் ஏற்படுத்தி உள்ளார். அந்த குழுவினர் நர்மதா நதி பாதுகாப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
5 மதகுருக்களுக்கு சலுகை
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 5 சாமியார்களுக்கு சிவராஜ் சிங் சவுகான் இணை அமைச்சர் அந்தஸ்து கொடுத்துள்ளார். நர்மதா நதியை பாதுகாப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 5 மதகுருக்களும் உதவி செய்வார்கள். எனவே அவர்களுக்கு இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படுவதாக சவுகான் கூறியுள்ளார்.
|
இணை அமைச்சர் சலுகை
கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகந்த், நர்மதானந்தா, ஹரிகரானந்தா, பாபாயுமகராஜ் ஆகிய 5 மதகுருக்ககளுக்கு இணை அமைச்சருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இணை அமைச்சர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் சவுகான் குறிப்பிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் பாபாவையும் மடக்கிய சவுகான்
கம்ப்யூட்டர் பாபா கடந்த 2014-ம் ஆண்டு கும்ப மேளாவின் போது நர்மதை ஆற்றின் கரையோரம் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு எதிராக நர்மதை ஆறு திட்டட்தில் நடக்கும் ஊழல்களை நடைபயணம் மூலம் வெளிக்கொண்டு வர உள்ளதாகவும், முதல்வருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாக அவர் அறிவித்திருந்த நிலையில் கம்ப்யூட்டர் பாபாவுக்கும் இணையமைச்சர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆதாயத்திற்காக
சமூகத்தில் ஆன்மீக வாதிகளுக்கு உள்ள செல்வாக்கை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காகவே 5 மதகுருக்களுக்கு சலுகைகளும், மத்திய இணை அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதற்காகவே இந்த விநோத நடவடிக்கை என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.