'போண்டா' பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க மறுப்பு- 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட்!
மல்காங்கிரி: ஒடிஷாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடி இனத்தின் குழந்தைகளுக்கு சரியாக கல்வி கற்பிக்காமலும் அவர்களை புறக்கணிப்பதுமாக இருந்த 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்காங்கிரி மாவட்டம் போண்டோ குன்றுகளில் மட்டுமே போண்டோ இனப்பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடி இனத்தவரிடத்தில் இருந்தும் மிகவும் தனித்தவர்களாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.இப்பகுதி மாவோயிஸ்டுகளின் கோட்டையாகும்.
இவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றை மாநில அரசு நடத்தி வருகிறது. இதில் 180 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் திடீரென வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து போண்டா பழங்குடி இனத்தில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பரு சிசா, முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையடுத்து அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது.
மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் பிரசாத் குமார் இந்த விசாரணையை நடத்தினார். அப்போதுதான் மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்காதது, பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் ஒழுங்காக வராதது உள்ளிட்ட பல புகார்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.