தேக்கடியில் 9 மாதங்களில் 5 புலிகள் அடுத்தடுத்து பலி -அதிர்ச்சியில் பாதுகாப்பு அதிகாரிகள்
தேக்கடி: தேக்கடி புலிகள் சரணாலயத்தில் தொடர்ச்சியாக 5 புலிகள் மரணமடைந்துள்ளதால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆண் புலியின் சடலம் மீட்கப்பட்டது. சில மாதங்களில் ஐந்து புலிகள் மரணமடைந்துள்ளதால், வனத்துறையில் தீவிரமாக பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயம் 925 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் சரணாலயம் தேனி மாவட்டம், சபரிமலை, பத்தனாந்திட்டா மாவட்டங்களில் விரிவடைந்த மிகப்பெரிய புலிகள் சரணாலயமாகும். கடந்த 2014 கணக்கெடுப்புப்படி தேக்கடி புலிகள் காப்பகத்தில் 38 புலிகள் இருந்ததாக கணக்கீடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட நெல்லிக்காம்பட்டி பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்த நிலையில் மீட்கப்பட்டது. தேசிய புலிகள் ஆணைய மருத்துவ குழுவினரால் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
தேக்கடி புலிகள் சரணாலயத்தில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா ஏழு மற்றும் ஒன்பது வயதுள்ள இரண்டு ஆண் புலிகளும், மே மாதத்தில் இரண்டு ஆண் புலிகளும் உயிரிழந்த நிலையில் தற்போது, இந்த ஆண்டின் ஒன்பது மாதங்களில் இதோடு சேர்த்து ஐந்து புலிகள் இறந்துள்ளன.
தொடரும் புலிகள் மரணத்தினால் மர்ம தொற்று நோய் தாக்குதல் உள்ளதா என உடற் கூறு பரிசோதனையில் கவனிக்கப்பட்டு வருகிறது. இதனால், பெரியாறு புலிகள் சரணாலய அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.