கேஸ் கசிவால் 9 கிராமங்கள் கடும் பாதிப்பு.. தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கிராமத்தினர் வெளியேற்றம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆலையில் விஷவாயு கசிந்ததை அடுத்து ஆலையை சுற்றியுள்ள 5 கிராமத்தினர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
விசாகப்பட்டினத்தில் கோபாலபட்டினத்தில் உள்ளது தென்கொரியாவுக்கு சொந்தமான எல்ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் பிளாஸ்டிக்கிற்கான பொருளை தயார் செய்கிறது. லாக்டவுன் காரணமாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.
விசாகப்பட்டினம் கேஸ் கசிவு.. கொத்து கொத்தாக சாலையில் விழுந்த மக்கள்.. உணர்வற்ற நிலையில் குழந்தைகள்!
5000 பேர்
இந்த நிலையில் இந்த ஆலை 40 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. அப்போது 5000 டன் கொண்ட இரு டாங்குகளிலிருந்து ஸ்டைரின் என்ற வாயு வெளியேறியது. இது காற்றில் கலந்ததால் இதை சுவாசிக்க 13 பேர் இறந்துவிட்டனர். 5000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் பாதிப்பு
இந்த வாயுவை சுவாசித்தோர் மயங்கிய நிலையில் விழுவதும் மூச்சு திணறல் ஏற்படுவதுமாக இருந்தது. குழந்தைகள் பெரியவர்கள் என பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷவாயு கசிவால் ஆலையை சுற்றியிருந்த வெங்கடாபுரம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மரங்களின் நிறம்
இதையடுத்து இங்கிருந்த 1500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். மொத்தம் 9 கிராமங்கள் இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட நிலையில் 5 கிராம மக்கள் முழுமையாக அப்புறப்படுத்தினர். மற்ற கிராமத்தினரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது. விஷவாயுவின் அடர்த்தியால் அங்கிருந்த மரங்களின் நிறம் மாறிவிட்டது.
ரூ 1 கோடி நிதி
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இங்கு மீட்பு பணிகளை முதல்வர் கண்காணித்து வருகிறார். விரைவில் விசாகப்பட்டினம் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.