முசாபர்நகர் பிரச்சினைக்கு முடிவு.. 5 வருட பகைக்கு தீர்வு.. கைகோர்த்த ஜாட் - முஸ்லீம் இன மக்கள்!
முசாபர்நகர் கலவரம் முடிந்த 1611 நாட்களுக்கு பின் அந்தக் கலவரத்தில் ஈடுபட்ட இரு பிரிவினரும் சமாதானம் ஆகி உள்ளனர்.
முசாபர்நகர்: 2013ல் செப்டம்பர் மாதம் 8ம் தேதி உத்தர பிரதேசத்தில் இருக்கும் முசாபர்நகரில் பெரிய கலவரம் நடந்தது. இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த பெரிய கலவரம் இது என்று கூட சொல்லலாம்.
இதில் 40 ஆயிரம் மக்கள் வெவ்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்தார்கள். 8 முஸ்லீம் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். பலர் ஊரை மொத்தமாக காலி செய்தார்கள்.
இந்தக் கலவரம் முஸ்லீம் மக்களுக்கும் ஜாட் இன மக்களுக்கும் இடையில் நடந்தது. பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக முடியாத பிரச்சனை இப்போது முடிந்துள்ளது.
மன்னிப்பு கேட்டார்கள்
சென்ற வருடம் தான் இதற்கான சமாதான தூது செல்ல ஆரம்பித்தது. ஜாட் இன மக்கள் தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்க சென்றார்கள். 8 முஸ்லீம்களைக் கொன்ற ஜாட் இளைஞர்கள் ஒவ்வொரு முஸ்லீம் வீடாகச் சென்று மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் முஸ்லீம் மக்கள் யாரும் இந்த மன்னிப்பை ஏற்கவில்லை.
தொடர்ந்து நடந்தது
அதன்பின் மூன்று முறை சென்று இப்படி மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் இழப்பை மறக்க முடியாத முஸ்லீம் மக்கள் மன்னிக்க மறுத்தார்கள். ஆனாலும் ஜாட் இன இளைஞர்கள் கீழே இறங்கி வந்து மன்னிப்பு கேட்டார்கள்.
இறங்கினார்கள்
இந்த நிலையில் அங்கு இருக்கும் முஸ்லீம் குடும்பம் ஒன்றின் பிரச்சனையை ஜாட் இளைஞர்கள் சேர்ந்து தீர்த்து வைத்துள்ளார்கள். இந்த நிகழ்வில் இருந்து முஸ்லீம்கள் மனம் இறங்கி வந்துள்ளனர். மன்னிப்பு வழங்கினாலும் அவர்கள் மீது இருக்கும் வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார்கள்.
முஸ்லீம் மீதான வழக்கு
இந்தநிலையில் முதலில் ஜாட் இன மக்கள் முஸ்லீம்கள் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினார்கள். பின் பஞ்சாயத்து நடத்தி இந்தப் பிரச்சனையை தீர்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். போலீஸ் பாதுகாப்பில் இந்தப் பஞ்சாயத்து நடந்தது. பல நாட்களாக நீடித்தது.
ஒரே கோரிக்கை
இதில் முஸ்லீம் மக்கள் ஒரேயொரு கோரிக்கை மட்டும் வைத்துள்ளனர். இந்தப் பஞ்சாயத்தில் என்ன பேசினாலும் சரி ஆனால் ஒரு பாஜக கட்சி உறுப்பினரும் அங்கே இருக்கக் கூடாது என்றுள்ளார். ''நாங்க ஜாட் இன மக்களை மதிக்கிறோம், பாஜகதான் இந்த பிரச்னைக்கு காரணம் அவர்கள் வந்தால் நாங்கள் வர மாட்டோம்'' என்றுள்ளார்.
பெரிய பஞ்சாயத்து
உபியில் நடந்த பெரிய பஞ்சாயத்து இது என்று கூறப்படுகிறது. 53 ஜாட் இளைஞர்களும், 27 முஸ்லீம் இளைஞர்களும் தற்போது வழக்கில் சிக்கி இருக்கிறார்கள். இவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் தற்போது வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இந்தப் பஞ்சாயத்தில் எல்லாம் பேசி சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளது.
சுபம்
தற்போது அந்த மக்கள் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்துள்ளனர். முஸ்லீம்கள் அனைவரும் யாரும் வற்புறுத்தாமல் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் , ஹர ஹர மஹாதேவ் என்றும் கோஷமிட்டுள்ளனர். ஜாட் இன மக்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டு இருக்கிறார்கள். தாஜ்மகால் யார் காட்டியது என அங்கு யோகி பிரச்சனையை உருவாக்க நினைக்கும் போது இங்குப் பெரிய ஒற்றுமை உருவாகி இருக்கிறது.