நாய் கழுத்தில் நைலான் கயிறு கட்டி பைக்கில் 2 கி.மீ இழுத்துச்சென்று கொன்ற கொடூரர்கள்
புனே: நாயை பைக்கில் கட்டி இரு கிலோ மீட்டர்கள் இழுத்துச் சென்று கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புனே நகரின் அருகேயுள்ள சுஸ் என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பைக் ஒன்றில் 5 வயது மதிக்கத்தக்க நாயை நைலான் கயிறால் கட்டிய 5 இளைஞர்கள் அதை 2 கி.மீ தூரம் தரதரவென பைக்கிலேயே இழுத்துச் சென்றுள்ளனர்.
கழுத்தில் நைலான் கயிறு இறுக்கி, அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்தது. அதை தெருவிலேயே போட்டுவிட்டு இளைஞர்கள் இறக்கமின்றி ஹாயாக போய்விட்டனர்.
இதை கவனித்த விலங்கு பிரியர், அன்சன் பலக்கால் என்ற இளைஞர், ஹிஞ்சேவாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த இளைஞர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960ன்கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இருவர் மாடியிலிருந்து நாயை வீசி அதை வீடியோ எடுத்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.