விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ. 68,607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை!
பெங்களூரு: சமீபத்தில், வேண்டும் என்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத (Wilful Defaulters) தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி உட்பட 50 முன்னணி தொழிலதிபர்களின் 68,607 கோடி ரூபாய் கடன்களை, திரும்ப வராத கடன்களாக (Written Off) எழுதி இருப்பதாக, ஒரு ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி பதிலளித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு ஒன்இந்தியா தமிழ் இணையதளம் உள்பட அனைத்து பத்திரிகைகள், செய்தி இணையதளங்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி பிரசுரித்தன. இந்த விவகாரம் பலராலும் பல விதமாக புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு சாரார் கடனை தள்ளுபடி செய்ததாகவும், இன்னொரு தரப்பினர் தள்ளுபடி எல்லாம் செய்யவில்லை, ரைட் ஆஃப் தான் செய்து இருக்கிறார்கள் எனவும் விவாதித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக விமர்சித்து கருத்து தெரிவித்ததால் அது விவாதப் பொருளாக மாறியது.
நிதி அமைச்சர் விளக்கம்
இதற்கு எல்லாம் விளக்கம் கொடுக்கும் விதத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் ட்விட்டர் பக்கத்தில் விரிவாக விளக்கம் கொடுத்து இருந்தார். அதில் இந்த 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யவில்லை, அதை ஆர்பிஐ விதிமுறைகள் படி ரைட் ஆஃப் தான் செய்து இருக்கிறோம் என தெளிவாக விளக்கி இருக்கிறார். அதோடு அந்த 50 பேரிடம் இருந்தும் கடனை திருப்பி வசூலிக்க எல்லா நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்படும் எனவும் விளக்கி இருக்கிறார். அந்த ட்விட்களைக் காண க்ளிக் செய்யவும்:
விளக்கம்
இந்த நேரத்தில், சமூக வலைதளங்களில் கடன் தள்ளுபடிக்கும், கடன் ரைட் ஆஃப் செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளாமல் பலர் பல கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் இந்த இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை முறையாக புரிந்து கொள்வோம். தொடங்குவோமா.
கடன் ரைட் ஆஃப் (Loan Written Off)
இதை ஒரு உதாரணத்தின் வழியாகப் பார்ப்போம்.
ராதா ஒரு வங்கியில் கடன் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவரால் ஒழுங்காக கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை கடனுக்கான அசலோ அல்லது வட்டியோ வரவில்லை என்றால் ராதாவின் கடனை, செயல்படாத கடனாக (NPA - Non Performing Asset) வைப்பார்கள்.
கடன் ரைட் ஆஃப் 1
அதற்கு அடுத்த சில ஆண்டுகள் வரைக்கும் ராதாவின் கடன்களுக்கான அசலோ அல்லது வட்டியோ செலுத்தவில்லை அல்லது வங்கியால் வசூலிக்க முடியவில்லை என்றால், அப்போது ராதாவின் செயல்படாத கடனை (NPA - Non Performing Asset), திரும்ப வராத கடன்களாக (Written Off Debts) என எழுதி விடுவார்கள்.
கடன் ரைட் ஆஃப் 2
இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன என்றால், ராதாவின் கடனை வங்கி ரைட் ஆஃப் செய்த பின்பு கூட, ராதா வங்கிக்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியவர் தான். ஆக ராதாவுக்கு பணம் வருகிறது, வேறு ஏதாவது சொத்து பத்துக்கள் இருக்கிறது என்றால், வங்கி நீதிமன்றத்தை நாடி, சொத்து பத்துக்களைக் கூட பறிமுதல் செய்து கடனை வசூலிக்க, வங்கிக்கு அதிகாரம் இருக்கிறது.
கடன் தள்ளுபடி (Loan Waiver)
உதாரணத்துக்கு: கரண் ஒரு வங்கியில் இருந்து "தொழிலதிபர் சிறப்புக் கடன்" என்கிற திட்டத்தின் கீழ் கடன் வாங்கி இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அந்த கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த முடியவில்லை. திடீரென "தொழிலதிபர் சிறப்புக் கடன்" திட்டத்தின் கீழ் வங்கிகள் கொடுத்த எல்லா கடன்களையும், மத்திய அரசு தள்ளுபடி (Waive off) செய்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
கடன் தள்ளுபடி 1
இப்போது வங்கி நிர்வாகம், அரசின் ஆணைக்கு இணங்க, கரண் வாங்கிய கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்துவிடும். இந்த தள்ளுபடிக்குப் பின், கரண் வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கரண், வங்கிக்கு கடன்பட்டவர் அல்ல. இந்த தள்ளுபடி நடவடிக்கைக்குப் பின், கரணிடம் இருந்து பணத்தை வசூலிக்க, வங்கிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இது தான் கடன் ரைட் ஆஃப்-க்கும், கடன் தள்ளுபடிக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம்.