தமிழகம் பாணியில் குஜராத்திலும் அதிரடி! 50 காங்கிரஸ் எம்எல்ஏகள் கூண்டோடு சஸ்பெண்ட்!!
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவையில் உனா தலித்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிய 50 காங்கிரஸ் எம்எல்ஏகளை சபாநாயகர் ராமன்லால் வோரா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவை இன்று வழக்கம் போல தொடங்கியது. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏகள், கண்டன பேணர்களோடு கூட்டத்தில் பங்கேற்க சட்டப்பேரவையில் நுழைந்தனர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உனா வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏகள் கோரினார்கள்.
இதற்கு சபாநாயாகர் மறுப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ்சார் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் வோரா, காங்கிரஸ்காரர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் 50 எம்எல்ஏகளையும் சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டார். இதனையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏகளை அவைக் காவலர்கள் அவையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.
முன்னதாக, உனாவில் செத்த மாட்டின் தோலை உறித்ததாகக் கூறி 4 தலித்துகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்று கோரி காங்கிரசார் அமளியில் ஈடுபட்டனர்.