மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்... ம.பியில்!
போபால்: மத்தியப் பிரதேச பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சட்டர்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பள்ளியில் பரிமாறப்பட்ட சத்துணவு விஷமாக மாறியதால், மாணவர்களுகு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் கூறுகையில், ‘பள்ளியில் இன்று மதியம் வழங்கப்பட்ட சத்துணவு சரியில்லை. அதைச் சாப்பிட்டதும் அனைத்து மாணவர்களும் வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டோம்' எனத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் அரசு அதிகாரிகள் வந்து தூய்மையான உணவு வழங்கப் படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்துவதில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளியில் இருந்து திரும்பியதும் தனது மகள் வாந்தியெடுக்கத் தொடங்கியதாகவும், பள்ளியில் வழங்கப் பட்ட மதிய உணவில் கூலாங்கற்கள் கிடந்ததைக் கண்டதாக மகள் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தாய் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப் பட்ட மாணவர்களில் 24 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உணவுத் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி திவாரி, "பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.