50 லட்சம் முஸ்லீம் 'ஊடுருவல்காரர்கள்'.. நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள்.. பாஜக தலைவர் பரபர பேச்சு
கொல்கத்தா: 50 லட்சம் முஸ்லிம் ஊடுருவல்காரர்கள் இந்தியாவில் இருந்து விரட்டியடிக்கபடுவார்கள் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில, பாஜக தலைவரான திலீப் கோஷ், இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
கையை முறுக்கி.. தவறாக சீண்டினார்கள்.. பாஜக சிஏஏ ஆதரவு போராட்டத்தில் பெண் ஆட்சியருக்கு நேர்ந்த கதி
முஸ்லீம்கள்
பாஜக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இது பற்றி கூறியதை பாருங்கள். மொத்தமாக சுமார் 50 லட்சம் முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஊடுருவியுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் படுவார்கள். முதல் கட்டமாக வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த அவர்கள் பெயர் நீக்கப்படும். அதன்பிறகு மமதா பானர்ஜி யாருக்கும் சப்போர்ட் செய்து கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு திலீப் கோஷ் பேசியுள்ளார்.
சுட்டுக்கொல்ல வேண்டுமாம்
சில தினங்களுக்கு முன்பாக திலீப் கோஷ், பேசிய மற்றொரு பேச்சும், இதேபோல சர்ச்சைக்குள்ளானது. அவர் கூறுகையில், பொதுமக்களின் சொத்துக்களை போராட்டம் என்ற பெயரில் எதற்காக சேதம் விளைவிக்கிறார்கள்? இது அவர்கள் அப்பா வீட்டு சொத்து கிடையாது. வரி செலுத்தும் பொது மக்களின் சொத்து. மமதா பானர்ஜி அவர்களைப் பற்றி எதுவும் சொல்லப் போவது கிடையாது. ஏனென்றால் அவர்கள்தான் அவரின் வாக்கு வங்கி.
சரியான நடவடிக்கை
அசாம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது போன்றவர்களை நாயை சுடுவது போல சுட்டுக் கொன்றுள்ளது அரசு என்பதை மறக்க வேண்டாம். உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் கர்நாடக அரசுகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடிய தேசவிரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது சரியான நடவடிக்கை. இது போன்றவர்களை விடவே கூடாது.
வெடிகுண்டு
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு, நாம் கோவில் பிரசாதங்களை பரிசாக வழங்க முடியாது. துப்பாக்கி குண்டுகள்தான் அவர்களுக்கான பரிசு. பொதுச் சொத்துகளுக்கு, சேதம் விளைவிப்போர் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும். அல்லது வெடிகுண்டு வீசி அழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.