நிதிஷ்குமாரின் ' அரசியல் டி.என்.ஏ.வில் கோளாறு'.. பிரதமர் மோடியின் பேச்சால் கொந்தளிக்கும் பீகார்!!
பாட்னா: கூட்டணிகளை மாற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அரசியல் மரபணுவில்தான் (டி.என்.ஏ) கோளாறு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது பீகாரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 50 லட்சம் பேரின் மரபணுக்களை பிரதமர் மோடிக்கு அனுப்புவோம் என்று நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனது தனிப்பட்ட நலனுக்காக பா.ஜ.கவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்தார். தம்முடைய சகாக்கள் மற்றும் கூட்டணியை அவர் கழற்றி விடுவதை பார்க்கும் போது அவருடைய அரசியல் ரத்தத்தில் டி.என்.ஏ.வில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என தோன்றுகிறது என்று கூறியிருந்தார்.
பிரதமரின் பேச்சு பீகார் அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த பீகார் மக்களையே பிரதமர் மோடி இழிவுபடுத்தியிருப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடிக்கு எதிராக சபாப் வாப்சி அல்லது உங்கள் கருத்தை திரும்ப பெறுங்கள் என்ற பிரசாரத்தை நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார்.
Inspite of our repeated pleas Modiji hasn't retracted his derogatory remarks on our DNA, we're going to launch शब्दवापसी /TakeBackYourWords
— Nitish Kumar (@NitishKumar) August 10, 2015
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, பீகார் மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து உள்ளார். இந்த தரக்குறைவான கருத்துகளை திரும்ப பெற வலியுறுத்தி பலமுறை கேட்டுக்கொண்ட போதும் அவர் செவிசாய்க்கவில்லை. இதனால் பீகாரை சேர்ந்த 50 லட்சம் பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை அவர்களின் கையெழுத்துடன் பிரதமருக்கு அனுப்பி வைப்போம் என்று எச்சரித்துள்ளார் நிதிஷ்குமார்.
இதனிடையே அரசியல் டி.என்.ஏ. குறித்து பேசிய பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தி ஐக்கிய ஜனதாதளம் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் இணைந்து பாட்னாவில் இன்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளன.