ஆப்கானிஸ்தானில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி!
டெல்லி: இந்தியாவில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்னையில் பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெங்காயத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அட்டாரி - வாகா எல்லை வழியாக இந்த வெங்காயம் நேற்று மாலை இந்தியா வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான், ஈரான், எகிப்து, சீனா ஆகிய நான்கு நாடுகளில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வெங்காயம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.