ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு- 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
அமராவதி: ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 829 ஆசிரியர்கள், 575 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா கோரத்தாண்டவம்: அமெரிக்காவில் முதல்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று
ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு
ஆந்திராவில் திங்கள்கிழமை முதல் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திரா மாநிலத்தில் 98.84% பள்ளிகள் திறக்கப்பட்டன. 87.78% ஆசிரியர்கள் பணிக்கு வருகை தந்தனர்.
829 ஆசிரியர்களுக்கு கொரோனா
ஆனால் 9-ம் வகுப்பில் 39.62% மாணவர்களும் 10-ம் வகுப்பில் 43.65% மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த 70,790 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 829 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
575 மாணவர்களுக்கு கொரோனா
95,763 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்புள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு கோதாவரி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 262 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
பள்ளிகளை மூட வலியுறுத்தல்
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்த அளவாக 52 ஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா உறுதியானது. இதேபோல் குண்டூர், சித்தூர், நெல்லூர், கிழக்கு கோதாவரி மாவட்டங்களிலும் கணிசமான அளவு ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஆந்திராவில் பள்ளிகளை உடனே மூட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.