அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது, கூட்டணி வைத்துக் கொண்டு பின்னர் கூட்டணி எம்.எல்.ஏக்களை தன் வசப்படுத்துவது என்கிற பார்முலாக்களை சக்சஸ்புல்லாக செயல்படுத்தி வருகிறது பாஜக.
திரிபுராவில் காங்கிரஸை அழித்து பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரி வாக்கு வங்கிகளை தன்வயப்படுத்தி லோக்சபா தேர்தலில் அறுவடை செய்தது. இதேபோல் பீகாரிலும் தம்முடைய பார்முலாவை அரங்கேற்றியது பாஜக.
மே.வங்கம் ஸ்டைலில் தமிழகத்திலும் மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுத்து ஆறுதல் அடையும் பாஜக
ஜேடியூவுக்கு ஆப்பு
நிதிஷ்குமாரின் ஜேடியூவுடன் கூட்டணி வைத்து கொண்டே அந்த கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றக் கூடாது என்பதற்காகவே சிராக் பாஸ்வானை இன்னொரு பக்கம் களமிறக்கிவிட்டது பாஜக. அந்த கட்சி எதிர்பார்த்தது போலவே ஜேடியூவுக்கு குறைவான இடங்கள் கிடைக்க பாஜகவின் பிடியில் சிக்கிக் கொண்டது அந்த கட்சி.
6 எம்.எல்.ஏக்கள் கபளீகரம்
இந்த நிலையில் ஜேடியூவுக்கு இன்னொரு மரண அடியாக அருணாச்சல பிரதேசத்தில் அந்த கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை பாஜக இழுத்துக் கொண்டது. 2019-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்ட ஜேடியூ 7 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 41 இடங்களில் வென்றது. அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூ 2வது பெரிய கட்சியாக இருந்தது.
அருணாச்சல் சட்டசபை பலம்
தற்போது ஜேடியூவின் 6 எம்.எல்.ஏக்களை கொத்தாக பாஜக அள்ளிக் கொண்டுவிட்டது. மேலும் அருணாச்சல் பிரதேச மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரும் பாஜகவில் இணைந்துவிட்டார். இதனால் 60 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 48 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜேடியூவுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏதான்.. காங்கிரஸ், தேசியவாத கட்சிகளுக்கு தலா 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
அதிமுகவுக்கு வார்னிங்
அதாவது கட்சிகளுடன் கூட்டணி வைப்பது போல வைத்து அந்த கட்சியையே காலி செய்கிற பாஜகவின் பார்முலாவின் அருணாச்சல பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இதே பார்முலாவைத்தான் தமிழகத்திலும் அதிமுகவை இலக்கு வைத்து பாஜக அரங்கேற்றப் போகிறது என அரசியல் பார்வையாளர்கள் எச்ச்ரித்து வருகின்றனர். அதிமுகவின் முதுகில் இப்போது சவாரி செய்வது; பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்களை கொத்து கொத்தாக வளைத்து பாஜக பெயிண்ட் அடித்து தமிழகத்திலும் பாஜக அதிகாரத்தை நோக்கி காலூன்றி விட்டது என பிரசாரம் செய்வது என்கிற பார்முலாதான் அமலாகப் போகிறது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் தொடர் எச்சரிக்கை.
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!