6 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பசு பாதுகாவலர்களால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து, லோக் சபாவில் அமளியில் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது கையில் வைத்திருந்த காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி காங்கிரஸ் எம்பிக்கள் வீசினர்.
இதனையடுத்து, அவை கண்ணியத்தை மீறி நடந்து கொண்டதற்காக, 6 காங்கிரஸ் எம்பிக்களை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி.க்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டுக் கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.