அசாமில் டமால் டுமீல் மழை.. வெள்ளத்தில் சிக்கி 8 லட்சம் மக்கள் தவிப்பு.. 6 பேர் உயிரிழப்பு
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 8.5 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வாநாட், ஜோர்கட், தரங், பார்பேட்டா, நல்பாரி, மஜூலி, சிரங்க், திபுருகார், உள்ளிட்ட 21 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 700 கிராமங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கின்றன. பலரது வீடுகள் இடிந்துள்ளன. 15 ஆயிரத்து 268 ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக 8.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைவுபடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உத்தரவிட்டுள்ளார். பல பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோலாகட் மற்றும் சிமா ஹசாவ் மாவட்டங்களுக்குட்பட்ட சில இடங்களில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தின் விளைவாக நிலச்சரிவும் ஏற்பட்டது.
சென்னையில் நள்ளிரவில் மழை.. வெக்கை தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி!
இது போல் உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாம், அருணாசலப்பிரதேசம், மிசோரம், உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் ஒரு வாரம் கன மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழக மக்கள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.