காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 8 பேர் வீரமரணம்
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் 3 தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 8 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்ரின் தெற்கு பகுதியில் உள்ள புல்வாமாவில் அமைந்துள்ள போலீஸ் குடியிருப்பு பகுதிக்குள் 3 தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர். இந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் மறைந்து கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.
நிலைமையை சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், தீவிரவாதிகளை நோக்கி எதிர் தாக்குதலை நடத்தத் தொடங்கினார். இதனால் கடுமையான சண்டை நடைபெற்றது. தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 8 ராணுவ வீரர்கள் பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 12 மணி நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு கட்டிடங்கள் மீட்கப்பட்டன. இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. எனினும் கட்டிடத்தினுள் வேறு தீவிரவாதிகள் மறைந்துள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதனால் அந்த கட்டிங்களுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
2 முதல் 4 தீவிரவாதிகள் இன்னும் கட்டிடத்தினுள் மறைந்திருக்கக் கூடும் என்று உள்துறை செயலாளர் ராஜீவ் மஹ்ரிஷி டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஒரு வீடும் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டுள்ளது இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.