அங்கிள்.. எப்படியாச்சும் கோழிக்குஞ்சை காப்பாத்துங்க.. 10 ரூபாயுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த குட்டி பையன்
Recommended Video
அய்சால்: "என் பையன் இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. மனசு நிறைய ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்கிறார் ஒரு தந்தை!
மிசோரம் சாய்ரங் பகுதியில் 6 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு அங்கு திரிந்து கொண்டிருந்தது.
சிறுவனோ தெரியாமல் அந்த கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். உடனே முகமெல்லாம் வியர்த்து போன சிறுவன், அடிபட்ட கோழிக்குஞ்சினை எடுத்து கொண்டு அப்பாவிடம் ஓடினான்.
கண்டிப்பு
"தெரியாமல் சைக்கிள் விட்டு ஏத்திட்டேன்.. எப்படியாவது இந்த கோழிக்குஞ்சை காப்பாத்தணும்.. வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்" என்று கெஞ்சி கூப்பிட்டுள்ளான். அதற்கு சிறுவனின் அப்பாவோ, "அதெல்லாம் தெரியாது... நீதானே சைக்கிள் விட்டு ஏத்தினே? நீயே இதை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போ.. நானெல்லாம் கூட வரமாட்டேன்.. ஆஸ்பத்திரிக்கு பணமும் தரமாட்டேன்" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
சேமிப்பு பணம்
அடிபட்ட கோழிக்குஞ்சை காப்பாற்ற அப்பா வரமாட்டேங்குறாரே என்று கண்கலங்கி போன சிறுவன், கொஞ்சம் கூட தாமதிக்காமல் வீட்டில் உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் பணம் எவ்வளவு என்று பார்த்தான். 10 ரூபாய் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, அடிபட்ட கோழிக்குஞ்சையும் எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.
சைக்கிள்
கையில் கோழிக்குஞ்சுடன் பதட்டத்தில் வந்து நிற்கும் சிறுவனை அங்கிருந்த நர்ஸ்கள் என்னவென்று விசாரித்தனர். அப்போது விவரத்தை சொல்லவும், ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கெல்லாம் என்னவோ போல் ஆகிவிட்டது. ஏனென்றால் சிறுவன் சைக்கிளை விட்டு ஏத்தும்போதே அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டது.
சிறுவன்
அது தெரியாமல் அடிபட்டதாக நினைத்து கொண்டு ஆஸ்பத்திரி வரை வந்ததை நினைத்து நெகிழ்ந்து போய்விட்டார்கள். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை ஒரு கையில் கோழிக்குஞ்சு, ஒரு கையில் பத்து ரூபாய் நோட்டுடன் போட்டோ எடுத்து இணையத்தில் போட்டுவிட.. சிறுவனுடன் கோழிக்குஞ்சு போட்டோ றெக்கை கட்டி பறந்து வருகின்றன.
சிறுவனின் இரக்கத்துக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. மரித்தது கோழிக்குஞ்சுதான்.. ஆனால் மனிதநேயம் உயிர்ப்புடன் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த குட்டிப் பையன் ரூபத்தில்!