14 வருடத்தில் நாட்டை விட்டு ஓடிப் போன 61,000 இந்திய கோடீஸ்வரர்கள்
டெல்லி: கடந்த 14 வருடத்தில் இந்தியாவிலிருந்து 61,000 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் கடந்த 14 வருடத்தில் அதிக அளவிலான கோடீஸ்வரர்களை இழந்த நாடுகளில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளதாம்.
வரி, பாதுகாப்பு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
நியூ வேர்ல்ட் சர்வே
நியூ வேர்ல்ட் வெல்த் மற்றும் லியோ குளோபல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன இந்த ஆய்வின்போது, இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.
2000 முதல்
2000மாவது ஆண்டு முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 61,000 பெரும் பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனராம்.
சீனாவுக்கு அடுத்து நாம்தான்
இதே காலகட்டத்தில் சீனாவிலிருந்து 91,000 கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அதற்கு அடுத்து அதிக அளவிலான கோடீஸ்வரர்களை இழந்த நாடு இந்தியாதான்.
எங்கு போனார்கள்
இந்தியாவிலிருந்து வெளியேறியவர்கள் பெரும்பாலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே அதிக அளவில் போயுள்ளனர்.
சீனர்களின் இலக்கு
சீனர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர், இ்ங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிடத்தின் தாயகம் இங்கிலாந்து
உலக அளவில் அதிக அளவிலான கோடீஸ்வரர்கள் அடைக்கலம் புகுந்து நாடு இங்கிலாந்துதான். கடந்த 14 ஆண்டுகளில் இங்கு 1.25 லட்சம் பேர் குடியேறியுள்ளனர்.
பிற நாடுகளில்
பிற நாடுகளில் வெளியேறிய கோடீஸ்வரர்கள் வரிசையில் பிரான்சில் 42,000 பேரும், இத்தாலியில் 23,000, ரஷ்யா 20,000, இந்தோனேசியா 12,000, தென் ஆப்பிரிக்கா 8000, எகிப்து 7000 என உள்ளனர்.