ஆந்திராவில் துயரம்.. கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 11 பேர் பலி.. 30 பேர் கதி தெரியவில்லை
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது . 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 40 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் தற்போது 5 லட்சம் கன அடிநீர் வெள்ளமாக பாயந்தோடுகிறது. இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றுக்கு இன்று ஏராளமானோர் சுற்றுலா வந்துள்ளனர். அப்படி வந்தவர்களில் 60க்கும் மேற்பட்டோர் படகில் ஏறி காந்திபோச்சசமா கோயிலில் இருந்து அற்புதமான பாபி கொண்டலு மலைகளை சுற்றி பார்க்க புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஆற்றின் நடுவில் படகு சென்று கொண்டிருந்த போது அதிக வெள்ளம் காரணமாக திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் படகில் இருந்த 61க்கு மேற்பட்டோர் நீரில் மூழ்கிவிட்டனர்.
'
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளனர். இதேபோல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 60 பேர் இரண்டு பிரிவாக மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.
இதில் 21 பேரை இதுவரை மீட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆற்றில் மூக்கிய 40 பேரில் இதுவரை 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த படகு விபத்து சம்பவம் கிழக்கு கோதாவரியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.