இந்தியாவில் 62 சதவீத இளம்பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணியை பயன்படுத்தும் அவலம்... சர்வேயில் தகவல்
இந்தியாவில் 62 சதவீத இளம்பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டேராடூன்: இந்தியாவில் 62 சதவீத இளம்பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரமற்ற வகையில் துணியையே பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவலை ஒரு சர்வே அளித்துள்ளது.
சானிட்டரி நாப்கின்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய குடும்ப சுகாதாரம் என்ற அமைப்பு நாடு முழுவதும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்துவது நாப்கின்களா அல்லது துணிகளா என்பது குறித்து ஒரு சர்வே எடுத்தது. அதில் பெரும்பாலான பெண்கள் சுகாதாரமற்ற வகையிலான துணிகளையே பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
அந்த சர்வேயில், நாட்டில் 42 சதவீத பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தி வருவதாகவும், அவற்றுள் 16 சதவீத பேர் உள்ளூர்களில் தயாரிக்கப்படும் நாப்கின்களை பயன்படுத்துவதாக தெரிகிறது. கிராமப்புறங்களில் 48 சதவீத பெண்களை தவிர்த்து பெரும்பாலான பெண்கள் சுகாதாரமற்ற நிலையிலான துணிகளையே பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புறங்களில் 78 சதவீத பெண்கள் நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர். கல்விக்கும் வசதி வாய்ப்புக்கும், சுகாதார முறையில் மாதவிடாயை எதிர்கொள்வதற்கும் நேரடி தொடர்பு உடையதாகவவும் சர்வே கூறுகிறது.12 அல்லது அதற்கு மேற்பட்டோரில் பள்ளிச் செல்லாதோரை காட்டிலும் 4 மடங்கிற்கும் அதிகமாக நாப்கின்கள் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். அதேபோல் வசதியற்ற பெண்களை காட்டிலும் வசதியுடைய பெண்களும் 4 மடங்கிற்கு மேல் நாப்கின்களை பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.
பீகாரில் 82 சதவீத இளம்பெண்கள் இன்னமும் துணியை பயன்படுத்துகின்றனர். இதே நிலை தான் சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் நீடிக்கிறது. மிசோராம் (93%), தமிழகம் (91%), கேரளம் (90%), கோவா (89%), சிக்கிம் (85%) ஆகிய மாநில பெண்கள் நாப்கின்களை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் மாதவிடாய் காலத்தை எதிர்கொள்கின்றனர். மகாராஷ்டிரம் (50%), கர்நாடகம் (56%) மற்றும் ஆந்திரா (43%) ஆகிய மாநிலங்களில் பெண்கள் குறைந்த அளவிலான பாதுகாப்பை கடைப்பிடிக்கின்றனர்.
சிறிய மாநிலங்களான உத்தரகண்டில் 55 சதவீத இளம்பெண்கள் துணியையே பயன்படுத்துவதால் அவர்களுக்கு எளிதில் நோய் தொற்றுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 62 சதவீத பெண்கள், அதாவது 15 முதல் 24 வயதுக்குள்பட்ட பெண்கள் நாப்கின்களுக்கு பதிலாக துணியையே பயன்படுத்துகின்றனர். நாப்கின்கள் மீது ஜிஸ்டி வரியை குறைக்க கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கம் விசாரணைக்கு உள்ளது.