ஒடிசாவில் 63 கோழிகள் திடீர் உயிரிழப்பு.. இறப்புக்கான காரணம் தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!
புவனேஷ்வர்: மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதை நீங்கள் செய்திகளில் கேட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். கோழிகள் மாரடைப்பால் இறந்ததை கேள்விபட்டு இருக்கிறீர்களா? இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பரிதா. அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கோழிகளை வளர்த்து வருகிறார்.
63 கோழிகள் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரஞ்சித் பரிதாவின் பண்ணையில் இருந்த 63 பிராய்லர் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து வீட்டில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் கடுமையான சத்தத்துடன் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன. இந்த இரைச்சல் காரணமாகத்தான் தனது கோழிகள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக ரஞ்சித் பரிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இசை சத்தம்
'இது தொடர்பாக அவர் விரிவாக கூறுகையில், '' ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், அருகில் உள்ள மைதாபூர் கிராமத்தைச் சேர்ந்த திருமண குழுவினர் டி.ஜே இசை சத்தமாக ஒலித்துக் கொண்டே எனது கிராமத்திற்கு வந்தனர். மேலும், அதிக சத்தம் ஒலிக்கும் பட்டாசுகளையும் வெடித்தனர். எனது பண்ணையில் உள்ள 2000 பிராய்லர் கோழிகளுக்கு இசை சத்தம் இடையூறாக இருந்ததால் திருமண ஊர்வலத்தில் இருந்தவர்களிடம் ஒலியைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
கால்நடை மருத்துவர் உறுதி
ஆனால் குடிபோதையில் இருந்த சிலர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அதிக இரைச்சல் காரணமாக பண்ணையில் இருந்த கோழிகள் பயந்து ஓட ஆரம்பித்தன. ஒரு மணி நேரம் கழித்து 63 கோழிகள் பரிதாபமாக இறந்து விட்டன' என்று கூறியுள்ளார். இது பற்றி ரஞ்சித் பரிதா உள்ளூர் கால்நடை மருத்துவரிடம் ஆலோசித்தபோது, பலத்த சத்தத்தால் பறவைகள் அதிர்ச்சியடைந்து, அவை இறந்துவிட்டதாக அவர் கூறியதாக தெரிகிறது.
போலீசில் புகார்
இதனை தொடர்ந்து கோழிகள் இறப்புக்கு காரணமான பக்கத்து வீட்டு ராமச்சந்திர பரிதாவிடம், கோழிப்பண்ணை உரிமையாளர் ரஞ்சித் பரிதா இழப்பீடு கேட்டுள்ளார். ஆனால் ராமச்சந்திர பரிதா இழப்பீடு கொடுக்க மறுத்து விட்டார். '' இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கோழிகளை கடும் வாகன இரைச்சலுக்கு மத்தியில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது, அவைகள் இதுவரை இறக்காத நிலையில் இசை சத்தத்தால் மட்டும் எப்படி கோழிகள் இறக்க முடியும்?'' என்று ராமச்சந்திர பரிதா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ரஞ்சித் பரிதா உள்ளூர் போலீசில் ராமச்சந்திர பரிதா மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.