மருந்துகளுக்கு செலவிட்டே நொடித்துப் போகும் மக்கள்... என்ன செய்யலாம்?- கேட்கும் சுகாதாரத் துறை!
டெல்லி: மருத்துவ செலவு அதிகரிப்பால் ஆண்டுக்கு 6 கோடி பேர் வறுமை நிலைக்கு ஆளாவதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது மத்திய சுகாதாரத்துறை.
மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும், வறுமையை ஒழிக்கவும் என பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. புதிதாக பல திட்டங்களை அறிமுகப் படுத்தியும் வருகின்றன.
ஆனால், ஆண்டுதோறும் சுமார் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவ செலவு அதிகரிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
மருத்துவச் செலவு...
2011-2012-ம் ஆண்டில் ஆண்டு வருமானத்தில் கிராமப்புற பகுதியில் 6.9 சதவீதமும், நகர்ப்புற பகுதியில் 5.5 சதவீதம் மருத்துவத்துக்காக செலவிடப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
6 கோடி மக்கள்...
இந்த புள்ளி விபரத்தின் படி ஆண்டுதோறும் 6 கோடியே 30 லட்சம் மக்கள் மருத்துவத்திற்காக அதிக அளவில் செலவு செய்வது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
திட்டக்குறிப்பு...
இதில் பாதிக்கப்படும் மக்களை மீட்பதற்கு, சர்வதேச அளவில் புதிய சுகாதார திட்டம் ஒன்றை வகுத்து அமல்படுத்த வேண்டும் என்றும், தேசிய அளவில் புதிய சுகாதார கொள்கை திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய சுகாதார அமைப்பு திட்டக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
என்ன செய்யலாம்...
மேலும், இவ்வாறு மருந்துவ செலவால் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப் படுவதை தடுப்பதற்கான வழிமுறை மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு இணையதளம் மூலமாக ஐடியாவையும் பொதுமக்களிடம் கேட்டுள்ளது சுகாதார அமைச்சகம்.