காற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..!
ஒடிஸா: ஒடிஸா மாநிலத்தில் 64 வயதாகும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருக்கிறார்.
காற்றுக்கென்ன வேலி என்பதை போல் கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.
யார் இந்த நம்பிக்கை மனிதர் அவருடைய பின்னணி என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
ஜெய் கிஷோர்
ஒடிஸா மாநிலம் பர்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய்கிஷோர் பிரதான். பள்ளிப்பருவத்திலேயே டாக்டருக்கு படிக்க வேண்டும் என விரும்பிய அவர் அதற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி தோல்வியை தழுவியதால் பி.எஸ்.சி படிக்கச் சென்றார். பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக வங்கிப் பணிக்கான தேர்வில் கலந்துகொண்டு பாரத ஸ்டேட் வங்கியில் 1983-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
நீட் தேர்வு
இருப்பினும் அவருடைய மனதிற்குள் டாக்டருக்கு படிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும்-ஆற்றாமையும் இருந்துகொண்டே இருந்தது. இதனால் தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டி அதற்கான பயிற்சிகளை முறையாக கொடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் பர்லாவில் உள்ள விம்சார் மருத்துவக் கல்லூரியில் மகளை மருத்துவம் படிக்க சேர்த்துவிட்டார்.
எம்.பி.பி.எஸ். சீட்
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டே வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், நேரத்தை வீணாக கழிக்க விரும்பாத அவர் மீண்டும் டாக்டருக்கு படிக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார். இந்த நேரம் பார்த்து, கடந்த 2019-ம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்கான வயது வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கியது. இது போதாதா அவருக்கு நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கிய ஜெய்கிஷோர், இப்போது நீட் தேர்வில் வெற்றிபெற்று எம்.பி.பி.எஸ். சீட்டும் பெற்றுவிட்டார்.
69 வயதில் படிப்பு முடிப்பு
தனது மகள் மருத்துவம் படிக்கும் விம்சார் மருத்துவக் கல்லூரியிலேயே ஜெய்கிஷோர் பிரதானும் ஜூனியராக சேர்ந்திருக்கிறார். 64 வயதில் எம்.பி.பி.எஸ். படிக்கும் நாட்டின் மூத்த வயது மாணவர் என்ற பெருமையையும் ஜெய்கிஷோர் பெற்றிருக்கிறார். இதனிடையே இது குறித்து கருத்துக் கூறியுள்ள அவர், தாம் மருத்துவப் படிப்பை முடிக்கும் போது தனக்கு 69 வயதாகி இருக்கும் என்றும் அதற்கு பிறகு பணிக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
வெற்றி வசப்படும்
மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, மதிப்பெண் குறைவு, நீட் தேர்வில் தோல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக விபரீத முடிவுகளை தேடிக்கொள்ளும் மாணவர்களுக்கு ஜெய்கிஷோர் பிரதான் முன் மாதிரி மனிதராக திகழ்வது குறிப்பிடத்தக்கது. எதற்கும் மனம் தளராமல் செயல்பட்டால் எல்லாம் வெற்றியே.