66 மத்திய அரசின் திட்டங்கள் 10 ஆக குறைப்பு?
டெல்லி: மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 66 திட்டங்களை 10 ஆக குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்த பரிந்துரைகள் வழங்குவற்காக மாநில முதல்வர்கள் அடங்கிய துணை குழுக்களை அமைப்பது என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பணிகளை மத்திய திட்டக் கமிஷன் மேற்கொண்டு வந்தது. 60 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கலைத்தார்.
திட்டக் கமிஷனுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியாவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில முதல்வர்கள் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களின் முதல்வர்களும் தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் மத்திய அரசிடம் தாங்கள் எதிர்பார்ப்பது குறித்தும் விளக்கமாக பேசினார்.
இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டங்களை ஒவ்வொரு மாநிலங்களின் முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்படும் 66 திட்டங்களில் குறிப்பிட்ட சிலவற்றை மாநில அரசுகளுக்கு மாற்ற தயாராக உள்ளோம். இந்த 66 திட்டங்களில் எந்தெந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம்; எந்தெந்த திட்டங்களை ரத்து செய்யலாம்; எந்த திட்டங்களை மாநில அரசுகளுக்கு மாற்றலாம் என பரிந்துரை வழங்குவதற்கு மாநிலங்களின் முதல்வர்கள் அடங்கிய துணை குழுக்கள் அமைக்கப்படும் என்றார்.
கடந்தாண்டில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்ட 147 திட்டங்கள் 66 ஆக குறைக்கப்பட்டன. தற்போது இதை 10 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.