ஒரே வீடு.. 66 வாக்காளர்கள்.. ஓஹோன்னு ஓட்டு வேட்டையாடும் வேட்பாளர்கள்!
அலகாபாத்: ஒரே வீட்டில் 66 வாக்காளர்கள் உள்ளதால் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த வீட்டை விட்டு வைப்பதில்லை. மொய்த்தெடுத்துக் கொண்டுள்ளனராம்.
இந்த சுவராசியமான குடும்பம் வசிப்பது அலகாபாத் தொகுதியில். பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் ஒரு குடும்பத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் மொத்தம் 82 பேர் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இன்னமும் ஒற்றுமையாக உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.
தனிக்குடும்பங்கள் அதிகரித்து வந்த சூழலில் இப்போது தனிதனி மனிதர்களாக கூட நாம் வாழப் பழகிவிட்டோம். இப்படிப்பட்ட நிலையில்தான் அலகாபாத் அருகே உள்ள பஹ்ரைச்சா கிராமத்தில் ராம் நரேஷ் புர்டியா(98) என்பவரது குடும்பம் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள்.
நல்லகண்ணு 94 வயது அரசியல்வாதி.. மாற்று வீடு ஒதுக்காமல் வெளியேற்றியது தவறு.. அரசியல் கட்சிகள் கண்டனம்
இது குறித்து கூறிய ராம் நரேஷ் தாங்கள் இன்னமும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம் அதிலும் ஒரே சமையல் அறையைத்தான் இன்னமும் பயன்படுத்துகிறோம். வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்றாகவே சமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 20 கிலோ காய்கறி, 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை என சமையலுக்குப் பயன்படுத்துவதாகவும், சமையல் பணிகளை பெண்கள் கவனித்துக் கொள்வதாகவும் ராம் நரேஷ் கூறுகிறார். இவர்களில் இரண்டு பேர் மட்டும் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். மீதமுள்ளவர்கள் அனைவருமே விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த குடும்பத்தில் உள்ள 82 பேரில் 66 பேர் வாக்காளர்கள் என்பதால் அந்த தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுமே இந்த வீட்டுக்கு வர தவறுவதில்லை. ஒரே நேரத்தில் 66 வாக்குகளை அறுவடை செய்து விட முடியும் என்பதால் அனைத்து வேட்பாளர்களும் இங்கு வந்து வாக்கு சேகரிக்கின்றனர். நடைபெறவுள்ள 6 வது கட்ட தேர்தலில் இந்த குடும்பம் வாக்களிக்க உள்ளது.
இதில் 8 பேர் முதல் முறை வாக்காளர்கள். இந்த முதல் முறை வாக்காளர்கள் குறித்து கூறிய நரேஷ் "எனது கொள்ளு பேரன் பேத்திகள் இந்த தேர்தலில் வாக்களிக்க பெரும் ஆர்வமாக உள்ளனர், நாங்கள் அனைவருமே மதிய நேரத்தில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்போம், வாக்குச் சாவடி அதிகாரிகள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்" என்று நரேஷ் கூறினார்.
98 வயதான ராம் நரேஷின் குடும்பம் இன்னமும் மண் சுவர் கொண்ட வீட்டில்தான் வசிக்கின்றனர். ஆனால் மட்டற்ற மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர். தங்கள் குடும்பத்தைப் போலவே இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வசிக்க வேண்டும் என்று ராம் நரேஷ் கூறுகிறார்.
இது வட இந்தியாவில் என்றால் நம்மூரிலும் இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி ஒன்றியத்தில் எட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 40 வாக்காளர்கள் ஒன்றாக வாக்களிக்கின்றனர். குண்டேகவுடு என்பவரது குடும்பம் பல தலைமுறைகளாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது குடும்பத்தில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர். பலர் வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இருந்தாலும் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள் என்றால் அனைவரும் ஒன்று கூடி விடுகின்றனர்.
இது குறித்து கூறிய குண்டே கவுடு எங்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னமும் ஒன்றாக வாழ்வது மகிழ்ச்சியை தருகிறது. வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் எங்களது குடும்ப உறுப்பினர்கள் திருவிழாக்கள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் என்றால் ஒன்று கூடி விடுவோம். தேர்தலும் திருவிழா போன்றதுதானே அதனால் இப்போதும் ஒன்று கூடி வாக்களித்தோம் என்று தெரிவித்தார். அந்த ஊரிலேயே தங்களது குடும்பம்தான் பெரிய குடும்பம் என்பதால் அந்த பகுதியில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருமே தங்களது குடும்ப நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்கெடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
இப்படிப்பட்ட குடும்பங்களைப் பற்றி கேட்கவே பெருமையாக உள்ளது. ஒற்றுமையுடன் வாழ்வது எப்படிப்பட்ட மகிழ்வு என்பது இந்த குடும்பங்களை பார்த்தாலே தெரிகிறது.