ஏமனிலிருந்து இதுவரை 1022 இந்தியர்கள் மீட்பு... கடனில் தவிக்கும் கேரள நர்ஸ்கள் திரும்ப மறுப்பு!
டெல்லி: உள்நாட்டு போரால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஏமன் நாட்டில் இருந்து 664 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று இரவு தாயகம் திரும்பினர். ஏமனில் இருந்து இதுவரை 1022 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் வெளிநாட்டு வேலைக்காக வாங்கிய கடனை அடைக்க வழியின்றி தவிக்கும் கேரள நர்ஸ்கள், அந்த நாட்டிலிலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர்.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அரசு படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். ஏமனில் உள்நாட்டுப்போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அங்கு நிலவும் பதட்டமான சூழலால் ஏமனில் பணியாற்றி வரும் இந்தியர்களை வெளியுறவு துறை மீட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று அதிகாலை சானாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 664 பேர் டிஜிபோடிக்கு அழைத்து வரப்பட்டனர். இதைதொடர்ந்து இரு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மும்பை / கொச்சி: 334 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இரவு 11 மணியளவில் மும்பையில் வந்து இறங்கியது.
அதேபோல், 330 இந்தியர்கள் ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அவர்களை கேரள அமைச்சர் கே. ஜோசப் வரவேற்றார்.
முன்னதாக வியாழக்கிழமையன்று ஏமனில் இருந்து 358 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். தற்போது வரை ஏமனில் இருந்து 1022 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடன் பிரச்சினை
இதனிடையே பெரும்பான்மையான நர்ஸ்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். ஏனெனில், அவர்களில் பலர், 3 - 4 லட்சம் ரூபாயை தனியார் வேலைவாய்ப்பு ஏஜன்டுகளுக்கு கொடுத்து, ஏமன் நாடு போய் சேர்ந்து, வேலை பார்த்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர், சமீபத்தில் தான், வேலையில் சேர்ந்துள்ளனர்.மாதம், 50 ஆயிரம் ரூபாய் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்திற்கு வேலையில் இருக்கும் ஒவ்வொரு பெண் நர்சுக்கும், தலைக்கு மேலே, 2 - 3 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
உயிர் போனாலும் பரவாயில்லை
ஏமனில் வேலைக்கு செல்வதற்காக, கேரளாவில் வட்டிக்கு பணம் வாங்கிய அவர்கள், போருக்கு பயந்து நாடு திரும்பினால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போகும் என்பதால், உயிர் போனாலும் பரவாயில்லை; நாட்டுக்கு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இது போன்ற நிலைமை தான், இந்திய நகரங்களில் இருந்து ஏமன் சென்ற பெரும்பாலானோரின் நிலை என்பதால், மீட்கச் சென்ற இந்திய அதிகாரிகள் திகைத்துப் போயுள்ளனர்.