188 பேரை பலி கொண்ட மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு- 12 குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் ஒத்திவைப்பு
மும்பை: மும்பையில் 188 பேரை பலி கொண்ட ரயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் 12 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி வெவ்வேறு வழித்தடங்களில் சென்ற 7 மின்சார ரயில்களின் முதல் வகுப்பு பெட்டிகளில் சக்திவாய்ந்த குண்டுகள் 7 நிமிட இடைவெளிகளில் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 188 பேர் பலியானார்கள். 829 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டதாக சிமி இயக்கத்தைச் சேர்ந்த கமல் அகமது அன்சாரி (வயது 37), தன்வீர் அகமது அன்சாரி (37), முகமது பைசல் சேக் (36), எக்தேசாம் சித்திக் (30), முகமது மஜித் சபி (32), சேக் ஆலம் (41), முகமது சலீம் அன்சாரி (34), அப்துல் வஹீத் சேக் (34), முசாம்மில் சேக் (27), சொகைல் முகமது சேக் (43), சமீர் அகமது சேக் (36), நவீத் உசைன் கான் (30) மற்றும் ஆசிப் கான் (38) ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்து மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
9 ஆண்டுகள் நடந்த இவ்வழக்கு விசாரணையின் முடிவில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி தீர்ப்பளித்தது.
மேலும் அப்துல் வஹீத் சேக் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் குற்றாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரங்களை மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கும் எனத் தெரிவித்திருந்தது.
இவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட போது 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் 8 பேருக்கு தூக்கு தண்டனையும் வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனால் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புடன் இந்த வழக்கு முடிவுக்கு வந்தாலும் இந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக இருந்த ஆசம் சீமா, பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர்தான் லஷ்கர் இ தொய்பாவின் தலைவன் ஜாகி உர் ரெஹ்மான் லக்வியின் ஆலோசகராக உயர்ந்தான்.
இந்நிலையில் குற்றவாளிகளின் உடல்நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு இன்று உத்தரவிட்ட நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளைக்கு ஒத்திவைத்தது.