எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை.. ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம்.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 7 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு: ஜம்மு காஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 5 ஜவான்கள் வீரமரணமடைந்தனர் என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா பகுதியில் ஜம்முவுக்கான பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. இங்கு இன்று காலை ராணுவ உடையில் ஊடுருவிய தீவிரவாதிகள், ராணுவ முகாம்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தினர்.
வீரர்கள் அறையில் 20க்கும் மேற்பட்ட ஜவான்களும், 2 பெண்களும், 2 குழந்தைகளும் இருந்தனர். அதனால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரியான மனிஷ் மேத்தா தெரிவித்தார்.
சம்பா செக்டாரில் உள்ள ராம்கார்க் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றதை ஏற்கனவே இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் உரி பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேரை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.