இமாச்சல பிரதேச ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து.. நீரில் மூழ்கி 7 பேர் பலி.. 29 பேரின் கதி என்ன?
குல்லு : இமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 29 பேர் மாயமானதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பஞ்சாபிலிருந்து இமாச்சல பிரதேசத்திற்குச் தனியார் பேருந்து 50 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் சுர்ஜீத் சிங்கின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையிலிருந்து சரிந்து, அருகிலுள்ள பார்வதி ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்தது.
விபத்துக்குள்ளான பேருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பேருந்தில் பயணித்த 51 பேரில், 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், கூடுதல் காவல் ஆணையர் ராகேஷ் கன்வர் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் தற்போது ‘டைவர்கள்' ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் குல்லு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 29 பயணிகளின் நிலை என்னவென்றே தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.