7 மாத கர்ப்பிணி வயிற்றை அமுக்கி பெண் குழந்தையை எடுக்க முயற்சி.. படுபாதக கணவனால் பெண் பலி!
கருவில் இருந்தது பெண் குழந்தை என்பது தெரிய வந்ததால் 7 மாத கர்ப்பிணியின் வயிற்றை அமுக்கி குழந்தையை வெளியேற்ற முயற்சித்த கணவனின் செயலால் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
லூதியானா : கருவில் இருக்கும் இரண்டாவது குழந்தையும் பெண் என்பது தெரிந்ததால் கணவன் 7 மாத கர்ப்பிணியின் வயிற்றை அழுத்தி குழந்தையை வெளியேற்ற முயற்சித்ததில் இளம்பெண் பரிதாபமாக இறந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின், ஜந்தி கிராமத்தை சேர்ந்த இர்விந்தர் சிங்கும் அவரது சகோதரன் நிர்மல் சிங்கும் 32 வயது இளம்பெண்ணின் உடலையும், அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் புதைத்துள்ளனர். மர்மமான முறையில் தனது மகள் உயிரிழந்தது குறித்து பெண்ணின் தந்தை ரவிந்தர்சிங் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதன்படி போலீசார் அவர்களது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண், மற்றும் சிசுவின் உடலைக் கைப்பற்றினர். தன்னுடைய மகள் இரவு முழுவதும் கதறி அழும் சத்தம் கேட்டதாக அக்கப்பக்கத்தினர் தெரிவித்ததாகவும் ரவீந்தர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
தொந்தரவு
தன்னுடைய மகள் இறந்தது குறித்து சரியான காரணம் சொல்லாததோடு, அவளது அறை மற்றும் வீடு முழுவதும் ரத்தக்கரை படிந்திருந்ததாகவும் ரவீந்தர் கூறியிருந்தார். மேலும் அதனை அவர்கள் மணல் கொண்டு மறைத்திருப்பதாக புகாரில் கூறியிருந்தார். கடந்த சில நாட்களாகவே என்னுடைய பெண்ணை கருக்கலைப்பு செய்ய வலியுறுத்தியதோடு, உடல் ரிதியாகவும், மன ரீதியாகவும் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
2வதும் பெண் குழந்தை
உயிரிழந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இர்விந்தர் சிங், நிர்மல் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று ஸ்கேனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் 2வதும் பெண் குழந்தையா என்பதால் அதனை அழிக்க முடிவு செய்துள்ளனர்.
மனசாட்சியில்லாத செயல்
நள்ளிரவு கர்ப்பிணிப் பெண்ணின் கையை கட்டிப் போட்டதோடு, வயிற்றை அழுத்தியே குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தான் இளம்பெண்ணும், குழந்தையும் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த பெண்ணின் மாமியாரும் வீட்டில் தான் இருந்துள்ளார். ஆனால் அவர் உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
வழக்கு, கைது
ஈவு இரக்கமின்றி கர்ப்பிணிப் பெண்ணையும், சிசுவையும் கொன்ற படுபாதகர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்நெஞ்சக்கார அண்ணன் , தமிபிகள் மீது கொலை முயற்சி, பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்ய முயற்சி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே கொன்றது உள்ளிட்ட தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.