பாதுகாப்பு படை அதிரடி வேட்டை.. சத்தீஸ்கரில் 7 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கன்ட், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புஷ்பால் காட்டுப் பகுதியில் நகசலைட்கள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரின் துணையுடன் இன்று காலை அந்த காட்டுப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தகவலை நக்சல் சிறப்பு பிரிவு டிஜிபி அவாஸ்த்தி தெரிவித்துள்ளார். மேலும் நக்சலைட்டுகளிடம் இருந்த துப்பாக்கிகளும், வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.