“திக் திக்”.. ஜம்மு காஷ்மீரில் நேர்ந்த துயரம்! மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 7 பேர் பரிதாப பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மலை உச்சியிலிருந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் கத்ராவை நோக்கி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து ஏராளமான பயணிகளுடன் ஒரு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்து ஜம்மு மாவட்டம் கத்ராவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே சென்று கொண்டு இருந்தபோது மலையில் இருந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
மலை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் அப்பகுதியில் மீட்புப் பணிக்கு உதவி வருகிறார்கள். ஆம்புலன்ஸுகள் அழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பேருந்துக்கு அடியில் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை கண்டறிய கிரேன் ஒன்றும் வரவழைக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும், பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்றும், சிஆர்பிஎப் உதவி ஆணையர் அசோக் சவுதாரி தெரிவித்து உள்ளார்.
அவர்கள் வழிமாறி சென்று இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக அவர் கூறி உள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஜம்மு துணை ஆணையர் ஆவ்னி லவாசா தெரிவிக்கையில், "இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். 12 பேர் ஜஜ்ஜார் கோட்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்." என்றார்.
இதுகுறித்து ஜம்மு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளித்து இருக்கும் விளக்கத்தில், "ரேசாய் மாவட்டம் கத்ரா நோக்கி சென்றுகொண்டு இருந்து அமிர்தசரசில் இருந்து வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. 12 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.