இமாச்சலப்பிரதேசத்தில் சோகம்.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து.. பலியான 6 குழந்தைகள்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுனர், குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகினர்.
இமாச்சல பிரதேச சிம்மோர் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்துள்ளனர். பேருந்தானது, ரேணுகாஜி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது.
நிலைதடுமாறிய அந்த பேருந்து அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். அதற்குள் போலீசாருக்கும் தகவல் சென்றுவிட அவர்களும் களத்தில் குதித்தனர்.
பேருந்து இடிபாடுகளில் சிக்கிய பள்ளிக்குழந்தைகள், பேருந்து ஓட்டுநர் ஆகியோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் படுகாயம் அடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.
முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பேருந்து ஓட்டுனர் உட்பட குழந்தைகள் உட்பட 7 பேர் பலியாகுயுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.