மே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களை 7 கட்டங்களாக பாஜகவில் இணைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், மாவட்ட தலைவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பாஜக இணைத்தது. மேலும் இடதுசாரிகளும் தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்களித்தனர்.
இதனால் மேற்கு வங்கத்தில் 18 லோக்சபா தொகுதிகளை அதிரடியாக கைப்பற்றியது பாஜக. தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே மமதா தலைமையிலான திரிணாமுல் அரசை ஆட்டம் காண வைத்திருக்கிறது பாஜக.
தீயாய் பரவும் வீடியோ... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி.. சாமியார் பிரக்யா சிங் தாக்கூர்!
எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் தாவல்
அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள், 60 கவுன்சிலர்கள் இணைந்துள்ளனர். இது மமதாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது குறித்து பாஜக பொதுச்செயலரும் மேற்கு வங்க மேலிடப் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியா கூறியதாவது:
7 கட்ட கட்சி தாவல் நிகழ்ச்சி
மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அதேபோல் 7 கட்டங்களாக திரிணாமுல் எம்.எல்.ஏக்கள், கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்து கொண்டே இருப்பர்.
மமதா அரசு தானே கவிழும்
2021-க்குள் மமதா அரசாங்கம் பெரும்பான்மை இழந்து கவிழ்ந்துவிடும். அதுவரை மமதா பதவியில் நீடிக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு கைலாஷ் விஜய்வர்ஜியா தெரிவித்தார்.
மமதா ஆர்மி
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில அமைச்சர் ஜோதி பிரியா முல்லிக், 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு எம்.பி.தான் எங்களுக்கு...2009-ல் 19 எம்.பிக்கள் என விஸ்வரூபம் எடுத்தோம். நாங்கள் மமதாவின் ராணுவம். எத்தனை பின்னடைவு ஏற்பட்டாலும் அதை சரிசெய்து முன்னேறுவோம் என்றார் ஆவேசமாக.