7 வயது சிறுமி 3 பேரால் பலாத்காரம், 12 வயது சிறுமி 6 பேரால் பலாத்காரம்:என்ன தான் நடக்குது டெல்லியில்?
டெல்லி: டெல்லியில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
டெல்லியில் உள்ள டிக்ரி பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் 3 பேரால் கடந்த சனிக்கிழமை மாலை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை தென்மேற்கு டெல்லியில் உள்ள டிசாவ்ன் கிராமத்தில் 14 வயது சிறுமி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் பள்ளிக்கு சென்றபோது அவரை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் டெல்லியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை அவரது தாய் மாமா பல மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை யாரிடமும் கூறினால் அவ்வளவு தான் என்று அவர் மிரட்டியதால் சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் அவர் வயிறு வலியால் துடித்துள்ளார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டுபிடித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அவருக்கு ரத்தப்போக்கு நிற்காமல் இருந்ததால் மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 26 வயது தாய்மாமாவை கைது செய்தனர்.
அந்த நபர் சிறுமியை பலாத்காரம் செய்து வந்தது சிறுமியின் தந்தைக்கு தெரிந்தும் அவர் அதை கண்டுகொள்ளாமல் இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.