7 வயது சிறுமிக்கு பெல்ட் அடி : கொடூர ட்யூஷன் ஆசிரியை தலைமறைவு
பெங்களூரு: ஹோம் வொர்க் செய்யாததாக கூறி பெங்களூருவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை ட்யூஷன் ஆசிரியை பெல்ட்டால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பிஞ்சு மாணவியை பெல்ட்டால் அடித்த கொடூர டீச்சரின் பெயர் லதா என்பதாகும். இவர் பெங்களூரு நிலமங்கலாவில் வசித்து வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஹோம் வொர்க் செய்யாததற்காக ட்யூஷன் ஆசிரியை லதா பெல்ட்டால் அடித்து விளாசியுள்ளார்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் நிலமங்களா டவுன் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பாவனா, 7. இவள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள்.
பள்ளி முடிந்தவுடன் பாவனா கூடுதல் பயிற்சிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள். நேற்று முன்தினம் பாவனா, வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்துள்ளார். மேலும், அவர் பெல்ட்டால் பாவனாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாவனாவின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனால் பாவனா, டியூசனில் இருந்து அழுது கொண்டே தனது வீட்டிற்கு திரும்பினாள். மேலும், உடலில் இருந்த காயங்களை காண்பித்து கண்ணீர் மல்க சம்பவம் குறித்து அவள் தனது பெற்றோரிடம் கூறினாள்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாவனாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், பாவனாவின் பெற்றோர் சார்பில் நிலமங்களா போலீசில் டியூசன் ஆசிரியை லதா மீது புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து அறிந்த லதா தலைமறைவாகிவிட்டார். சம்பவம் பற்றி நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லதாவை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆசிரியை லதா மாணவர்களை கடுமையாக தாக்கும் குணம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டியூசனுக்கு வரும் குழந்தைகள் அனைவரையும் லதா அடித்துள்ளார். ஆனால் இந்த முறை மட்டுமே காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.