போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை… சிபிஐ கோர்ட் அதிரடி!
போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை விதித்து சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீதான போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன், போலி பாஸ்போர்ட் உதவியுடன் இந்தியாவை விட்டுத் தப்பி சென்றார். அவரை மும்பை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் பிடிபட்டார்.
அவரைப் பிடித்து வந்த போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா முகவரியில் மோகன் குமார் என்ற பெயரில், சோட்டா ராஜனுக்கு, பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் போலி பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
குற்றப்பத்திரிகை
இதைப் பயன்படுத்தி, சுற்றுலா விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சோட்டா ராஜன் கடந்த 2003ல் தப்பினார். இதனையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சோட்டா ராஜன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றவாளி
இதன் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சோட்டா ராஜன் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச் சாட்டு உறுதியானது. அவர்களை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து எதுவும் குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்தார்.
7 ஆண்டு சிறை
இந்நிலையில், இன்று போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் சோட்டாராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர்கள் நால்வரும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாவூத் கூட்டாளி
இதன்மூலம் நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த சோட்டா ராஜன் வழக்கு முடிவிற்கு வந்துள்ளது. தண்டனைப் பெற்ற சோட்டா ராஜன் உள்ளிட்ட 3 பேரும் பிரபல தாவூத் கூட்டாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.