பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை போட்டால் 7 ஆண்டு ஜெயில்.. வருமான வரித்துறை வார்னிங்
பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
டெல்லி: பிறருடைய வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கணக்கில் வராத பணத்தை பிறருடைய கணக்குகளில் கறுப்புப் பண முதலைகள் தாக்கல் செய்து வருவதையடுத்து இந்த எச்சரிக்கையை வருமான வரித்துறை விடுத்துள்ளது. புதிய பினாமி பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட ரூ. 200 கோடிக்கு மேல் கணக்கில் வராத பணத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். 30 ரெய்டுகள், 80 ஆய்வுகள் மூலமாக இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதில் 50 கோடி ரூபாய்ப் பணம் கடந்த நவம்பர் 8ம் தேதிக்குப் பின்னர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருமான வரித்துறையினரின் ரெய்டுகள் நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் பினாமி பணப் பரிவர்த்தனை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்களது கணக்கில் வராத பிறரது வங்கிக் கணக்குகளில் கொண்டு போய் முதலீடு செய்தால் கடும் நடவடிக்கையில் சிக்க நேரிடும். 7 வருட சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்று அவர்கள் கூறினர்.