பீகாரில் பூரண மதுவிலக்கு.. எல்லை தாண்டி நேபாளத்திற்கு சரக்கடிக்கச் சென்ற குடிமகன்கள் 70 பேர் கைது
பாட்னா: பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் எல்லைதாண்டி நேபாள நாட்டுக்கு மதுவருந்தச் சென்ற 70 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 5 ம் தேதியில் இருந்து பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் சொட்டு சாராயம்கூட கிடைக்காமல் மதுவறண்ட மாநிலமாக பீகார் மாறிவிட்டதால் அம்மாநில குடிமகன்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர். சிலர் போதையை தேடி பிறநாட்டு எல்லைக்குள்ளும் ஊடுருவ துணிந்து விட்டனர்.
அவ்வகையில், பீகாரின் சிதாமாரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள அண்டை நாடான நேபாளத்தின் ரவுட்டஹாட் மாவட்டத்துக்குள் நுழைந்து குடித்துவிட்டு, கும்மாளம் போட்ட 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்தவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இனி நேபாளத்துக்குள் சரக்கடிக்க நுழைய மாட்டோம் என்ற வாக்குறுதியையும் எழுதி வாங்கிய பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.