மன உளைச்சலாக உள்ளது... தற்கொலைக்கு அனுமதியுங்கள்... 70 ‘வியாபம்’ கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம்
டெல்லி: மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என வியாபம் ஊழல் விசாரணையில் கைது செய்யப்பட்டு குவாலியர் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் 70 பேர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
வியாபம் எனப்படும் மத்தியப் பிரதேச தொழில் கல்வி தேர்வு வாரியத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் புகார் நாட்டையே பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுவரை 45க்கும் மேற்பட்டோர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிய நிலையில் தற்போது உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு குவாலியர் சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 70 பேர் சேர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ‘சிறைக்குள் நாங்கள் மனரீதியாக மிகுந்த உளைச்சலுக்குள்ளாகி இருக்கிறோம். அதனால், எங்களுக்கு தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்' என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வியாபம் ஊழல் தொடர்பாக புதிதாக 5 பேர் மீது 3 புதிய வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.