ஜாட் போராட்டத்தில் கலவரம்: ஹரியானாவில் 5 பேர் பலி... 700 ரயில்கள் ரத்து... ரூ. 300 கோடி இழப்பு
சண்டிகர்: ஹரியானாவில் இட ஒதுக்கீடு கோரி ஜாட் சமூகம் நடத்திய போராட்டம் கலவரமான வெடித்தது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் சுமார் 700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் ஜாட் இன மக்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். பாஜக ஆட்சி நடைபெறும் ஹரியானாவில் வாழ்ந்து வரும் ஜாட் இன மக்கள், இடஒதுக்கீடு கேட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஜிந்த், ரோக்டக், பிவானி உள்ளிட்ட நகரங்களில் சாலைகளையும் ரயில்பாதைகளையும் மறைத்து ஜாட் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு ராணுவ உதவியை நாடியதையடுத்து ஹரியானாவில் உள்ள 9 இடங்களுக்கு ராணுவம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரம் காரணமாக பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஹரியானாவில் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து ஹரியான செல்லும் சுமார் 700 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 104 ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. 78 ரயில்களின் பயண தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், போராட்டம் தொடர்ந்தால் பல நூறு கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.