இந்தியா டூ இங்கிலாந்து via சீனா, ரஷ்யா!
மும்பை: 73 வயதாகும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தனது மனைவி மற்றும் பேத்தியோடு காரில் 19 நாடுகளுக்கு 72 நாட்களில் பயணித்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த பத்ரி பால்டவா என்ற இரும்பு ஏற்றுமதி தொழிலதிபர் இச்சாதனையை செய்து, வயது சாதனைக்கு ஒரு தடையல்ல என்பதை காட்டியுள்ளார். சார்டட் அக்கவுண்ட்டாகவும் பணியாற்றும் இவரது மனைவிக்கு 64 வயது. அவருடனும், இங்கிலாந்தில் வசிக்கும் தனது 10 வயது பேத்தியுடனும், மும்பையில் ஆரம்பித்த கார் பயணத்தை இங்கிலாந்தில் நிறைவு செய்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த தம்பதி என்றபோதிலும், இவர்கள் இப்போது மும்பையில் வசித்து வருகிறார்கள். இந்த பயணத்திற்கு 72 நாட்களாகியுள்ளது. 19 நாடுகளை தாண்டியுள்ளனர். இவர்கள் பயணித்த தொலைவு 22,200 கி.மீட்டர்களாகும்.
பேத்தியுடன் பயணம்
பத்ரி பால்டவாவுக்கு 65 நாடுகளின் விசா உள்ளது. அவரது மனைவி 55 நாடுகளின் விசா வைத்துள்ளார். மும்பையிலிருந்து இம்பால் நகரத்திற்கு செல்லவே இதில் 24 நாட்கள் ஆகியுள்ளது. ஏனெனில் தனது பேத்திக்கு இந்தியாவின் பரந்துபட்ட கலாசாரத்தை எடுத்துக்காட்ட பல இடங்களில் காரை நிறுத்தியதுதான் இதற்கு காரணம்.
யூ டர்ன்
இதன்பிறகு, மணிப்பூரிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் வழியாக இங்கிலாந்து பயணித்துள்ளனர். தாய்லாந்தில் சுற்றுலா அமைச்சகமே இவர்களுக்காக கலாசார நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. பிறகு சீனாவின் குன்மிங் சென்றுள்ளனர்.
பாக். பக்கம் போக முடியாது
மும்பையிலிருந்து மேற்கு நோக்கி பயணித்து இங்கிலாந்தை அடைவதுதான் எளிதான வழி. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் வழியாக பயணிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இவ்வாறு சுற்றி வளைத்து பயணித்துள்ளனர் இத்தம்பதிகள். நேரே வடக்கு நோக்கி சென்று திபெத் வழியாக சீனாவிற்குள் செல்லவும் சீனா
திட்டமிட்ட பயணம்
இவர்கள், பயணத்தின்போதே சாலை எப்படி, ஏரியா எப்படி என்பதையெல்லாம்திட்டமிட்டு முன்கூட்டியே ஹோட்டல்களை புக் செய்து அதில் தங்கியபடி பயணித்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 400 கி.மீ பயணித்துள்ளனர். இதற்கு 12 மணி நேரத்தை எடுத்துக்கொண்டனர். BMW X5 வகை சொகுசு காருக்கு இது அதிக நேரம்தான். ஆனால் தம்பதிகள் ஒவ்வொரு பகுதியிலும் வாகனத்தை நிறுத்தி அந்த பகுதியில் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளதே இதற்கு காரணம்.
அம்மாடியோவ்
ஒரே நாளில் 930 கி.மீ பயணித்தது இவர்களின் அதிகபட்ச தூரமாகும். காலை உணவை போலந்தின் வார்ஷாவில் சாப்பிட்டு கிளம்பிய இவர்கள் ஜெர்மனியின் கோலோஹ்னேவில் மதிய உணவையும், பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் இரவு உணவையும் சாப்பிட்டுள்ளனர். ரஷ்யா, பிரசல்ஸ் நகரங்களில் இந்திய தூதரகமே இவர்களுக்கு இரவு சாப்பாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
மாற்றம் தேவை
ரஷ்யா, சீனா என பல நாடுகளிலும் மக்களிடம் குடிமை பண்பு அதிகம் உள்ளது. கிராமங்களிலும் அப்படி உள்ளனர். இந்தியாவிலும் அதேபோல மாற்ற வேண்டும் என்பது தங்கள் விருப்பம் என்கிறார்கள் இந்த சாதனை தம்பதிகள். ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை குறிப்பிட்டு இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்.
நன்றி- திஹிந்து
Photos: https://www.facebook.com/badrinarayan.baldawa?hc_ref=OTHER