5 மாநிலத் தேர்தல் - பாதுகாப்புப் பணியில் 80,000 துணை ராணுவப் படையினர்
டெல்லி: தமிழகம் உட்பட சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் சுமார் 80 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அதிகாரப்பூர்மாக அறிவித்தார்.
இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மற்ற இரண்டு மாநிலங்களில் மேற்குவங்கத்திற்கு 6 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்திற்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கேரளாவில் தொகுதிகளுக்கும் என ஒட்டுமொத்தமாக இந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல்களில் மொத்தம் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்கென அசாமில் சுமார் 25,000 வாக்குச்சாவடிகளும், கேரளாவில் 21,000 வாக்குச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 65,000 வாக்குச்சாவடிகளும், மேற்குவங்கத்தில் 77,000 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.
மேலும், தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க சுமார் 80 ஆயிரம் துணை ராணுவத்தினரும் இந்த 5 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் உள்ளூர் காவலர்களும் ஈடுபடுத்தப்படுவர்.