ஜெகன் அதிரடி- தனியார்துறை வேலைவாய்ப்பில் ஆந்திரா இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அமல்!
Recommended Video
அமராவதி: ஆந்திராவில் தனியார் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் அம்மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அமல்படுத்தியிருக்கிறார்.
அரசு நிறுவனங்களில் போலி சான்றிதழ்களைக் கொடுத்து தென்னிந்திய மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை வடமாநில இளைஞர்கள் அபகரித்து கொள்கின்றனர். அதேபோல சொற்ப கூலிக்காக தனியார்துறையில் பணிபுரிய வடமாநில இளைஞர்கள் பெருமளவு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் குடியேறி உள்ளனர்.
இதனால் உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் தனியார் துறைகளின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்; இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால போராட்டம்.
இந்நிலையில் ஆந்திராவில் அதிரடியாக தனியார்துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தனியார்துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு வழங்கியிருக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 70% இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை அம்மாநில முதல்வர் கமல்நாத் நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.